27 December 2013

மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை 2–ம் திருமணத்திற்கு ஆசை வாலிபர் வெறிச்செயல்

மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை
 2–ம் திருமணத்திற்கு ஆசை: வாலிபர் வெறிச்செயல் 


 தர்மபுரி அருகே 2–ம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி மற்றும் 2 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி வாலிபர் கொடூரமாக கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

துர்நாற்றம்


தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த சுமார் 30 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பார்த்தபோது ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் கிணற்றில் இறங்கி பெண்ணின் பிணத்தை மீட்டனர். 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் அருகில் துணியால் சுற்றப்பட்ட பை ஒன்று கிடந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றி மேலே கொண்டு வந்து பார்த்தனர். அதில் பிறந்து 2 மாதமே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பையில் இறந்து கிடந்த சிசு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததற்கான அடையாளம் கிடைத்தது.

காதல் திருமணம்

அதைத்தொடர்ந்து போலீசார், பெண் மற்றும் சிசுவின் உடல்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஓசூர் ஜீவா நகரை சேர்ந்த செல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் மகள் ஜோதி(வயது21) என்பதும், அந்த பெண் சிசு அவருக்கு பிறந்தது தான் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

              செல்வம்– மாதம்மாள் தம்பதிகளின் 3–வது மகள் ஜோதி. இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது சோகத்தூரை சேர்ந்த ஜீவா(24) என்பவருக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதில் ஜோதி கர்ப்பம் அடைந்தார்.

அடித்து கிணற்றில் வீச்சு

இதனால் ஜோதி ஓசூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்றார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜோதியும் குழந்தையும் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தனர். மனைவி மற்றும் குழந்தையை பார்க்க ஜீவா மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களிடம் தனக்கு பெற்றோர் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதனை தடுக்க எனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜோதி மற்றும் குழந்தையை ஜீவாவுடன் அவர்கள் தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு அழைத்து வரும் வழியில் தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி ஜோதியிடம் ஜீவா தகராறு செய்துள்ளார். அப்போது ஜீவா, ஜோதியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஜோதியை தூக்கி வீசியுள்ளார். பின்னர் 2 மாத பெண் குழந்தையை துணியால் சுற்றி பையில் வைத்து கிணற்றில் வீசியுள்ளார். இதில் 2 பேரும் இறந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கணவர் கைது

மேலும் ஜீவா 2–வது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது முதல் மனைவி ஜோதி தடையாக இருப்பாள் என்பதற்காக அவரையும், அந்த பெண் குழந்தையையும் கொன்று விட்டால் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மற்றும் 2 மாத குழந்தையை கணவனே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to “மனைவி 2-மாத பெண் குழந்தை கிணற்றில் வீசி கொடூர கொலை 2–ம் திருமணத்திற்கு ஆசை வாலிபர் வெறிச்செயல் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT